Tuesday, April 22, 2008

கோடை விழா என் பார்வையில்...

ஞாயிறு 20.4.2008 அன்று அவ்வை தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா ஒரு வெற்றிகரமான விழாவாக நடைபெற்றது. எம்..பி. திரு . அம்பேத் ராஜன் அவர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே வந்து பெருமைப்படுத்தினார்.மூவர்ண உடையணிந்து சங்கத்தினரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. குழந்தைகளின் இசை வாத்திய கச்சேரி
நிகழ்ச்சியின் மிக அழகான ஆரம்பமாக இருந்தது.

தலைமை தாங்கி பேசிய திரு. அம்பேத்ராஜன் அவர்கள் ""நாம் தமிழ்நாட்டிலிருந்து எத்தனையோ மைல்கள் கடந்து வந்தும் ,நம்
பண்பாட்டை பாதுகாத்து கொண்டுவந்திருக்கிறோம்.. குழந்தைகளின் இன்னிசையில் அந்த பண்பாட்டின் வெளிப்பாட்டை உணர்கிறேன்.
இந்த தமிழ்சங்கத்திற்கு என்னாலான உதவிகளை நான் செய்யத்தயாராக இருக்கிறேன்""
என்று கூறியது அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.

மேடையில் அடுத்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளை தயார் செய்ய வேண்டி வந்ததால் மற்ற பேச்சாளர்களின் பேச்சை என்னால் கேட்க இயலவில்லை.. ஒலிப்பதிவு காட்சிகளோ அல்லது மற்ற நம் சங்கத்தின் உறுப்பினர்களின் பதிவுகள் மூலமாகவோ தான் நான் அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நான் தொகுத்த
அவ்வை யார்? குறுநாடகம். குழந்தைகளின் மழலையில் தூய தமிழ் சொற்கள் கேட்பதற்கு இனிமையே..

.பிறகு திருமதி பாமினி சேகர் அவர்களின் மாணவிகளின் நாட்டிய விருந்து. குழந்தைகளின் சிறுபாத அசைவுகள் கண்களுக்கு இனிமை.

தொடர்ந்து குறத்தி குறி சொல்லும் காட்சியை திருமதி ராஜேஸ்வரி நடராஜன் அவர்களின் மாணவிகள் ஆடியபோது மன்றத்தில் வந்திருந்தோர் தாளமிட்டு ரசித்தனர் .

அடுத்தாற்போல் தமிழ்நாட்டின் முக்கியல கலைவடிவம் கும்மி ..திருமதி இந்துலேகாவின் நடன அமைப்புக்கு ஆடிய குழந்தைகளின் கும்மி ஆட்டமும்
பார்வையாளர்களைத் தாளமிட செய்தது.

அரங்கத்துக்கு வெளியே திரு சம்பத் அவர்களின் உணவுக்கூடம் சுறுசுறுப்பாக விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.. மக்கள் உணவின் ருசியும், மணமும், தங்கள் பசியும், தங்களை செலுத்தியதால் உணவுக்கூடத்தை முற்றுகை இட்டிருந்தனர்.

இதற்கிடையில் மேடை, 'பாட்டுக்கு பாட்டு'
நிகழ்ச்சிக்காக தயாரானது. மக்கள் இதற்கென்ற காத்திருந்தார்ப்போல
ஆர்வமாக இருந்தனர். ஆரம்பக்கட்டதிலேயே பழய பாடல்களாக பாடப்பட .. மக்கள் கல்லூரிக்காலம் போல ஓ ஓ என்று
குரல் எடுத்தும், கைதட்டியும் ஆரவாரித்தனர்.

அரங்கித்தின் பார்வையாளர்களிடமும் சில சமயம் கேள்விகள் கேட்கப்பட உற்சாகத்தில் பதில் அளித்தும் பாடியே காட்டியும் மகிழ்ந்தனர் பார்வையாளர்கள்..

கடைசி நிகழ்வான பட்டிமன்றம் நடுவர் திரு சேதுராமலிங்கம் அவர்களின் உரையோடு தொடங்கியது. பேச்சாளர்கள் அனைவருமே நல்ல பட்டிமன்ற திறமையோடு தங்கள் வாதங்களை வைத்தார்கள்.

அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் உற்சாகத்தைத் தந்தார்கள்.
திரு . அம்பேத்ராஜன் போன்றவர்களின் உதவியால் .. சங்கம் தன் சொந்த கட்டிடமும் நூலகமும் என்று வளரவேண்டும் .